சாகும் தருவாயில் இருக்கும் என்னிடம் வாக்குமூலம் கேட்கிறார்கள் நானோ நெருப்பு தின்ற உடம்பில் கருகிக்கொண்டிருந்த உயிரில் செத்துவிடும் கணத்திலிருந்தேன் நா வறண்டு கடும் தாகத்திலிருந்தேன் தண்ணி தண்ணி என்று கேட்டு மன்றாடினேன் அதிகாரமோ கேள்விகளால் என் உயிரைத் துளைத்து சாவின் முன் நிறுத்தியது என் பாதி எரிந்த கண்கள் வழியே கருணை மரித்த உலகினைக் காண்கிறேன் என் ஞாபகத்தில் நான் வாழ்ந்த மகிழ்ச்சியான நாட்களை கடைசியாய் ஒரு முறை புரட்டிப் பார்க்கிறேன் எத்தனை எளிமையாய் என் சின்னஞ்சிறு உலகை ஒரு சிட்டைப்போல பறந்து வாழ்ந்திருந்தேன் எந்த வலியும் உணர்ந்திராத பருவத்தில் வாழ்ந்திருந்த என்னைப் போய் கொடூரமான குற்றவாளியைப் போல் கைகால்களைக் கட்டி பெட்ரோல் ஊத்திக் கொளுத்திவிட்டார்கள் எரிந்து முடிந்த என்னிடமே கேட்டார்கள் பாவிகள் நீயே கொளுத்திக்கொண்டாயா என்று இதற்கு மேல் நீதியை அநீதியாக்கும் உலகில் வாழ்ந்தென்ன பயன் என்று செத்துப்போகிறேன் உயிர்கள் வாழ அருகதையற்ற சமூகமே...