Posts

Showing posts from June, 2020
Image
மழை முடிந்தபின் நட்சத்திரங்கள் யாவும் திரும்பவும் வந்துவிட்டன அவற்றில் எந்த மாற்றமும் இல்லை ஒரு நட்சத்திரம் ஆவதற்கு என்ன செய்ய வேண்டும் ஒன்றும் செய்யமுடியாது பிறகு ஏன் நீ இங்கு இருக்கிறாய் யாருக்கும் தெரியாது இங்கு வெயில் மழை என வந்து கொண்டே இருக்கும் அனுபவிக்கலாம் உயிர் இதயத்தில் இருக்கிறது என்கிறார்கள் எனினும் எதுவும் புலப்படவில்லை எல்லா உயிர்களும் அதனதன் வேலையைச் செய்கின்றன இது ஏன் எனப் புரியவில்லை சிந்திப்பது ஏனென கலக்கமாக இருக்கிறது மொட்டைமாடியில் இருட்டின் நடுவே நானிருக்கிறேன் நாளை இல்லாது போகலாம் நான் அவ்வளவுதான்.
Image
உன்னைக் கவிதையில் எழுதுதல் ஜன்னல் வழியே இளம் வெயிலாய் வந்துவிழுகிறாய் பறவைகளிடமிருந்து உன் இசைக்குரல் கேட்கிறது மரங்களின் நடனங்களில் இருந்து எழும் ஓசைகளில் காற்றாய் வந்து தீண்டு கிறாய் காணும் இளம் பெண்களின் முகங்களில் உன் முகம் தெரிகிறது பூத்துக் கிடக்கும் மலர்களில் உன் நறுமணத்தை நுகர முடிகிறது முகம் உரசி செல்லும் வண்ணத்துப் பூச்சிகளில் உன் முத்தங்கள் கிளர்ச்சியூட்டுகிறது வெறுமை கூடிய தனிமையில் உன் புகைப்படங்கள் ஆறுதல் அளிக்கின்றன பயமுறுத்தும் இரவுகளில் உன்னை இறுக அணைத்துக் கொண்ட ஞாபகங்கள் மேல் எழுகின்றன விரக்தியில் நகரும் நாட்களில் உன் நினைவுகள் ஒத்தடங்கள் போல் இருக்கின்றன நதியோர நாணல்களில் உன் இளம் உடல் அசைந்து ஆடுகிறது புல்லின் மீதான பனித்துளிகளில் உன் விழிகள் உதிர்த்த கண்ணீர்த்துளிகள் காட்சியளிக்கிறது பயணத்தை அனுமதிக்காத பாதைகளிலிருந்து உன்னை கவிதைகளில் எழுதி காண்பதைத் தவிர எந்த மார்க்கமும் இல்லை அன்பே .... ஜூன் 19 காலை 10.13
Image
இருண்ட ஆகாயத்தின் ஊடே நட்சத்திரத்தின் ஒளியாய் ஆறுதல் அளிக்கிறாய் வறண்ட நிலத்தில் பெய்யும் மழையைப் போல உன் உரையாடல் இருக்கிறது சூழ்ந்திருக்கும் மரணம் பயமுறுத்துகிற போது உன் இளகிய மொழியால் உயிரை மலர்விக்கிறாய் துயரத்தில் ஆழ்ந்த பொழுதுகளை உன் இசைக் குரலால் மீட்டுகிறாய் தனிமையில் விழுந்து கிடக்கும் என்னிடம் உன் அருகில்தான் இல்லாமல் இருக்கிறேன் என்கிறாய் சதி செய்யும் காலத்தால் உன்னைப் பார்க்க முடியாது துவண்டு கிடக்கிறேன் நீயும் நானும் சந்திக்கும் வேளையில் பிரிந்த நாட்களின் வேதனையை உடல்களால் கவிதைகளாக எழுதிவிடலாம் அதுவரை தூரத்தில் இருப்பினும் அருகில் இரு சொற்களின் வடிவினில். ஜூன் 20 இரவு 11.03
Image
நீ அந்திப்பொழுதின் நிறங்களில் ஒளிர்ந்து இரவின் இடையே நட்சத்திரங்கள் ஆகிவிடுவாய் உன் சிமிட்டல்கள் உரையாடலைப் போன்று தோன்றும் இருட்டில் சுடரும் உன் நிர்வாணத்தில் மதுவின் போதை ததும்பும் ஊடலில் கத்திகள் போன்ற கூர் தன்மை வாய்ந்த உன் வார்த்தைகள் ரத்த ஊற்றுக்களைத் திறந்து விடும் ஓர் மழைநாளில் உன் சூட்டில் பதுங்கிய போது இன்பத்தில் மூழ்கியது உடல் காதல் வசந்தத்தில் பூக்கும் மலர்கள் போன்றது சிலவேளைகளில் இலையுதிர் காலத்தின் சருகுகள் போன்று சலனத்தில் வீழ்கிறது நீரோடை மீன்கள் போல ஓரிரு பொழுதுகளில் துள்ளித் திரிந்த போதும் வலைகளில் சிக்கி மடியும் காலமும் வந்துவிடுகிறது சொற்கள் தூண்டில் முள் போல குத்திக் கிழிக்கிற வேளையில் செதில்கள் காயமுறுகின்றன இருப்பினும் வானவில்லில் உன் முகங்கள் அலைமோதிய வண்ணமிருக்கின்றன இமைகளின் ஓரங்களில். ஜூன் 15 -  இரவு 11.48
Image
பரந்து விரிந்த ஆகாயத்தில் இரண்டு நட்சத்திரங்களை அருகருகே காண முடிந்தது ஒன்றோடொன்று பேசிக் கொள்ளவே இல்லை ஏனெனில் இரண்டுமே மௌனத்தில் ஆழ்ந்து இருக்கின்றன உலகமோ வியாக்கியானங்களில் மூழ்கிக் கிடக்கிறது சொற்கள் அருவருப்பானவை சொற்களற்ற உலகம் அழகானது ஏன் பேசவேண்டும் பேசாமல் இரு மாபெரும் மலை பேசுவதே இல்லை மலையைப் போல் இல்லாமல் மழை பற்றி பேசிக் கொண்டே இருக்கிறாய் நீ சாதாரணமாக இராதே சக்திவாய்ந்த மலையைப் போல் இரு மழை செத்துவிடும் காதலென்பது உடலின் விசாரணை நீயும் நானும் தோற்றுப் போகலாம் மரணத்தைப்பற்றி அறிவாயா.
Image
கண்களில் ஜாமத்தின் மழை அது சிற்றோடை போலவும் மாறக்கூடும் தனிமையில் ஒரு கனவைப் போலிருக்கிறாள் ஒரு பைத்தியம் போல் அவளாக பாவித்துப் பேசுகிறேன் சுவரிடம் மொட்டைமாடிக்கு சென்று சென்று வருகிறேன் இரவுகளில் பெருகி ஓடுகிறது வெறுமை காற்றாவது மரங்களிடம் உரையாடுகிறது என்னிடம் பேசிப்பேசியே என்னிடம் பதில்கள் இல்லை உலகம் திடீர் மரணங்களால் நிரம்பிய வண்ணம் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து செல்கிறார்கள் நிலத்தை சாவு இறுகப் பற்றிக் கொண்டுவிட்டன குரல்வளைகளின் அருகே அதன் நெளியும் விரல்கள் கடைசி மூச்சுக்கு முன்னதாக ஒருமுறையேனும் அவளைப் பார்த்து விடவேண்டும் இப்போது என்மீது விழுந்த மழைத்துளியில் அவள் இமைகளின் வலி எனக்குள் மேகத்தின் வெடிப்புகள்.
பகல் போய் தொலைந்தால் போதும் என்று இருக்கும்போது குளிர்ந்த இரவு நிலவுடன் வந்துவிடுகிறது. இந்தக் கோடையை கடப்பது அவ்வளவு எளிதானதல்ல. மனம் தொடர்ந்த  மழைக்காலத்திற்கு ஏங்குகிறது. ஆனால் அவ்வளவு பக்கத்தில் இல்லை. வெயிலைக் கண்டு அஞ்சி அஞ்சி இரவுக்காய் காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஆனால் மழைக்காலத்தில் இருக்கும்போது வெயிலுக்காக தவிப்போம். ஆயினும் மழை பெய்யும் காலம் சாரல்கள் நமக்குப் பன்னீர் தெளிக்கும். மழை தரும் குளிர்வில் வெயில் கொஞ்சம் வெறுப்பானது தான். எனினும் நாம் பருவகாலங்கள் இடையே தான் இருக்கிறோம். அவற்றை நுகர்தல் இன்றி வேறொன்றுமில்லை.
நான் வண்ணத்துப் பூச்சியாக மாறி பறந்தபோது என்னில் எத்தனை வண்ணங்கள் யாரின் கவனிப்பும் இன்றி எல்லாத் திசைகளிலும் வெளியை எனதாக்கிப் பறந்தேன் என் கண்களுக்கு தெரிந்ததெல்லாம் மலர்கள் மலர்கள் யாவும் அத்தனை அழகு வெவ்வேறு அழகு எழுதிச் சொல்ல வார்த்தைகள் இல்லை இன்னும் சில நாட்கள்தான் மலர்களின் நினைவோடு மறைந்து போவேன் என் சிறகுகள் மலர்கள் போல உதிர்ந்திருக்கும்.
கல்லறை மலர்களிலிருந்து மரணத்தின் வாசனை நாசிகளைக் குடைகிறது எத்திசையிலும் ஆந்தைகளின் அலறல்கள் போல மனிதர்கள் அலறிய வண்ணம் இருந்தனர் கொட்டித்தீர்க்கும் கனமழை போல எங்கும் வழிந்தோடும் கண்ணீர்த்துளிகள் நிரம்பிக் கிடக்கும் பிணவறையில் குரோதமும் விரோதமும் துரோகமும் கசிந்து கொண்டிருந்தன கைவிடப்பட்ட அனாதைகள் சாலையோரங்களில் மூச்சற்று கிடந்தனர் நகரம் மயான காடு போல காட்சியளித்தது காலனைக் கண்ட மருத்துவர்கள் தலை தெறிக்க ஓடி மறைகின்றனர் மக்களை கைவிட்டவர்கள் பதுங்கி விட்டனர் எங்கோ உயிர்கள் செத்து மடிய மடிய ஆழ்ந்த தனிமைக்குள் மெல்ல மறைகிறது நகரம்.
நகரமெங்கும் சாத்தான்களின் ஓலங்கள் கேட்ட வண்ணம் இருக்கின்றன உலகை துர்தேவதைகள் வலம் வருகின்றனர் பூக்கள் மலர்வது குறைந்து கொண்டிருக்கின்றன வானவில்லை ரசிக்கும் காலம் மரித்து விட்டது இறப்புச்செய்திகள் தவிர வேறொன்றும் காதுகளில் விழவில்லை பத்திரமாய் இருங்கள் என்று ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொள்கிறோம் ஆனால் வெளியெங்கும் காலன் உயிரைக் கவ்வ அலைந்து கொண்டிருக்கிறது காற்றைக் கூட எளிதாய் சுவாசிக்க முடியாமல் முகமூடிகளால் மூடிக் கொண்டு இருக்கிறோம் இறுதி மரியாதையில் உடல்கள் குழிகளுக்குள் வீசப்படுகின்றன அர்த்தம் இழந்து நிற்கும் வாழ்வில் சபிக்கப்பட்டு அல்லாடுகிறோம் எப்போது வேண்டுமானாலும் நாம் இறந்து விடலாம் நமக்குத் தெரியாமல் நம் அருகிலேயே இருக்கிறது மரணம். #கவிஞர்_ஐயப்ப_மாதவன்.
என் மொட்டை மாடிக்கு புத்தன் வந்துவிட்டான்  அவனுக்கு இங்கு நடப்பது எதுவும் புரியவில்லை  இங்கே ஏன் திடீரென்று இவ்வளவு மரணம் என்று கேட்கிறான் இழப்பை புதிராக பார்த்தவனுக்கு இவ்வளவு மரணங்கள் மிகப் பெரும் அதிர்ச்சியாய்  இருக்கக் கூடும்  இங்கு ஒரு நோய்க்கிருமி எங்களை துரத்துவதாக சொன்னேன் அதைப்பற்றி கவலை கொள்ளாதே என்றான் சாவு அவ்வளவு எளிதா என்றேன் எளிதுதான் என்றான் ஆனால் இப்படி சாகக்கூடாது என்றான் நிலவைப் பார்த்துக் கொண்டிருந்த நான் நிலவு ஏன் சாகவில்லை என்றேன் நிலவைப்போல் நீ இல்லை என்றான் நான் யார் என்றேன் நீ சாகப் பிறந்தவன் என்றான் அதற்காக இப்படித்தான் சாக வேண்டுமா எப்படியும் சாகத்தான் வேண்டும் நீ என்றான் நான் சாவதற்கு தயாரானேன் புத்தன் மாடிப்படி இறங்கி போய்விட்டான் நான் நிலவில் கலந்துவிட்டேன்.
Image
சக கவிஞர்-38- அய்யப்ப மாதவன் - மெளன யாத்ரீகா அவருக்கான கேள்விகள் 1. விமர்சனக் கூட்டங்களில் தொடர்ந்து உரையாடப்படும் கவிதைகளின் உண்மையான மதிப்பை (அதாவது ஒர்த்) எளிமையாகப் புரிந்து கொள்ள முடியும். ஆனால், அப்படியான உரையாடல் எதுவும் இல்லாமல் ஒரு தொகுப்பை( விருது போன்ற விசயங்களுக்காக) சிறந்தது என்று எதன் அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள்? பதில் : தமிழில் கவிதை நூல்களுக்கு விமர்சனக்கூட்டம் நடத்துவது சீர் செய்வதுபோன்றுதான். கவிஞன் தன் கவிதை நூலுக்கு தானே கூட்டம் நடத்தும் அவலம் நம்ம ஊரில்தான் இருக்குமென்று நினைக்கிறேன். யாரிடமாவது கடன் வாங்கியாவது கூட்டம் நடத்தினால்தான் கவிஞனுக்கு ஜென்ம சாபல்யம் கிட்டும். சீர் செய்ய நான்கு பேர் பேச அழைக்க வேண்டும். பெரும்பாலும் கவிஞனின் நண்பர்களாய்த்தான் இருப்பார்கள். விமர்சகர்கள் என்று தமிழில் குறிப்பிட்டுச் சொல்லும்படி இருப்பவர்கள் அழைத்தால் கூட வரமாட்டார்கள். அவர்களை அழைக்க வேண்டுமெனில் நீங்கள் சமூகத்தில் வசதியுள்ள கவிஞராக இருக்க வேண்டும். புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இதை நிறைய முறை கண்கூடாகவே பார்த்திருக்கிறேன். இன்னொன்று நீங்கள் எ...
நேற்று பார்த்த நட்சத்திரம் இன்றும்  என்னைப் பார்த்துச் சிரிக்கிறது நான் ஏன் இருக்கிறேன் என்று அதற்குப் புரியவில்லை அது ஏன் இருக்கிறதென்று எனக்குப் புரியவில்லை இருவரும் புரியாமலேயே இருக்கிறோம் என்னிருப்பும் அதனிருப்பும் வேறு வேறானது நான் செத்துப்போவேன் அதாவது நான் அநித்யம் அது இருக்கும் அது நித்யம் அது என்னைப் பார்த்துச் சிரிப்பதில் அர்த்தமிருக்கிறது அதைக் கண்டு என்னால் சிரிக்கவே முடியவில்லை என்னை நோய்த் தொற்றுத் துரத்துகிறது வெட்டுக்கிளி விரட்டுகிறது நான் பலகீனன் என் உயிரை எதுவும் பறிக்கலாம் நட்சத்திரம் நட்சத்திரம்தான்.
மழையிரவினுள் தலைக்குள் ஆந்தைகள் அலறுகின்றன  விபரீத காட்சிகள் தோன்றும்விதமாக இருட்டின் மீது அமைதியைப் போல் படுத்திருந்தேன்  யாரும் அருகில் இல்லாதது போல வானம் திறந்த நீர்த்துளைகள் மூடாதிருந்தது  எதற்கென்று தெரியாமல் நிசியில் வீடுகள் பேய் ஒளிந்திருப்பதான பாவனையில்  பயமுறுத்திக்கொண்டிருந்தன நிகழ்காலம் சாவின் விளிம்பில் தொக்கி  உலகை அச்சத்தில் சாய்த்திருந்தன வெயில் பகலை எரித்து போது சதைகள்  வெந்த ஊரின் முனகலைக் கேட்டிருந்தேன் இரவை மழை ஈரத்தில் வீழ்த்தி  கடுமையாய்ப் புணர்ந்துகொண்டிருந்தது நானோ நித்திரை வராது எதிர்காலம் தொலைந்த நினைவில்  நரகம் பீடித்த நகரில் விரிந்த தனிமையில் வீழ்ந்துகிடந்தேன்  இருப்பை உணராமல் சூரியன் உதிக்கும் பொழுது நான் நேற்றிலிருந்து  புதிய நாளைக்குத் திரும்பியிருப்பேன்  புதிய பயங்களுடன்.
Image
வெயில் காலம் போன பின்பும் வெயில் குறையவே இல்லை. உடலும் மனமும் பிசுபிசுத்து கொண்டே இருக்கிறது. ஆகாயம் நீல நிறத்தில் சுடர்கிறது. வெயில் அடிப்பது தெரியாமல் மரங்கள் காற்றுடன் கொஞ்ச மகிழ்கின்றன. சூரியனுக்கு உலகைப் பற்றிய அக்கறை இல்லை. அது அதன் வேலையைச் செய்கிறது. நாமோ வராத மழையை எதிர்பார்க்கிறோம். ஆனால் அது எப்போதாவது வந்து விட்டு மறைந்து விடுகிறது. மழை வந்த கணங்களில் நாம் மகிழ்ச்சியில் உறைந்துப் போகிறோம். பின்பு மலை எங்கோ போய்விடுகிறது. திரும்பவும் நல்ல வெயில். மழைக்காய் இந்த மனம் ஏங்கத் தொடங்குகிறது . பருவங்களின் விளையாட்டில் துயரங்களும் மகிழ்ச்சிகளும் வந்துபோகின்றன. இப்படித்தான் இந்த வாழ்வு இருந்துகொண்டே இருக்கும்.