உன் அருகாமையில் கங்காருவின் மடியில்
இருப்பதைப் போன்ற ஓர் உணர்வு
விதை வெடித்துக் கிளம்பும்
ஒரு தாவரத்தின் மென்மை உன் விரல்களில்
யாருமற்ற இரவில் உன்னுடன் மட்டுமே
உரையாடும் சொற்களில் ததும்பும் தாபம்
உலகத்தில் நீயும் நானுமே இருப்பதான அபூர்வ பிரக்ஞையில்
நம் காதல் குளிர்ந்த கடலென நம்மை நனைத்துப்போகிறது
உன் கண்களில் ஒளிரும் நட்சத்திரங்களில்
நமக்கான இரவை ஒளியேற்றுகிறாய்
உன் முழு உடலும் நான் சுவைக்கப் போகும்
அதிசயக்கனி போல ஜொலிக்கிறது
உன்னைத் தோலுரித்து ருசிக்கும்வேளை
உன் விரக வேதனையின் ஒலி
என் காமத்தில் நுழைந்து வெறியேற்றும்
அதோ அந்த நிலவும் வெட்கித் தலைகுனிகிறது
உன் ஆடைகளை மெதுமெதுவாய்க் கலைகிறேன்
நீயென்பதும் நானென்பதும் தொலைகிறது அன்பே.

Comments
Post a Comment