நித்திரை வராத மழை இரவில் உன் ஞாபகம் சொட்டுச் சொட்டாய் என்னிலிருந்து வீழ்கிறது
கனத்த தனிமையில் அடர் இருளின் இடையே ஒளியற்ற வானம் போல இருக்கிறது இதயம்
எத்தனை மாதங்கள் பேரிடர் காலத்தில் நீயற்ற துயரத்தில் கடந்துவிட்டன
பெரும் நோய்த்தொற்றின் அதீத பயத்தில் உன் அற்புத அழகை
காண முடியாமல் போயிற்று
உன் விரல்கள் பற்றுகிற சுகமும்
உன் புன்னகை ரசிக்கும் காலமும்
முத்தங்களின் அரிய சுவையும்
அணைத்துத் தூங்கும் பொழுதுகளும்
அதிகாலையில் தருகிற தேநீரின் கதகதப்பும் இல்லாமல் போய்விட்டன
நீயின்றி நீ இன்றி வாழும் இக்காலம்
இரக்கமற்றதாய் நீடிக்கிறது
திறந்து கிடக்கும் பெருவெளியில்
பயணங்களைத் தொடர மனமிருந்தும்
அபாயம் நீங்காத சூழல் தடுத்து நிறுத்துகிறது
ஆயினும் ஏதோ ஒரு நாள்
உன் கதவுகளை தட்டுவேன்
அப்போது மழைக்காலத்தின்
குளிர்மையில் நம் உடல்களின் வெப்பத்தில் கரைந்து போவோம் அன்பே...

Comments
Post a Comment