வெளியெங்கும் உறக்கமில்லாத மழை
தலையணையில் புதைந்த நித்திரை ஏதோ ஒரு பயத்தில்
பதுங்கியிபடி
ஜன்னல் வழி வரும் குளிர்காற்றில் தீண்டுமவள்
புரண்டு படுத்தேன்
சாமத்தில் விழித்திருக்குமென்னை
சத்தமிடத் தொடங்கினாள்
சமாதானப் பேச்சுக்கள் எடுபடவில்லை
நானும் அவளும் சண்டையிட
இரவு நடுங்கிக்கொண்டு ஒதுங்கிச் சென்றது ஓரத்திற்கு
வெறுப்பின் உச்சத்திற்கு சென்ற நான்
வெளியேறினேன்
மழை சாரலாய்ச் சுருங்கி இருந்தது
கலங்கிய நிலவு என்னை வரவேற்பது போல் இருந்தது
ஓரிரு நட்சத்திரங்கள் கண் சிமிட்டின
அங்கும் அவள் வந்துவிடுவாள் போல் தோன்றியது
மீண்டும் அறைக்குள் வந்தேன்
தலையணையில்
ரௌத்திரம் அவளாகிக் கிடந்தது.

Comments
Post a Comment