எப்போதும் போலவே வழிகள் இருந்தும்
பார்க்கும் துடிப்பு இருந்தும்
ஏனோ இந்தத் துர்க்காலம் அனுமதிக்கவில்லை
அவள் ஞாபகமாகவே நாட்களின் மீது சுமைகள் கூடுகின்றன
விரிந்த கடலின் காலிப் படகு போல இருக்கும் மனம்
காற்று போன்றிருக்கும் அவளால் அசைகிறது
இருட்டை துளைத்திறங்கும்
வான் சுடர்கள் போல பார்த்திருந்த விழிகள் ஊடுருவி மறைகின்றன
அவள் சுவடுகளின் மீது என் சுவடுகள் பதிந்த காலம் காதல் பொழுதுகளை மீட்டுத் தருகின்றன
அந்திப்பொழுதில் இசைக்கும் பறவைகளில் முத்தங்களின் ஓசை கேட்கிறது
சுவரின் மீது கொடிகள் போல என் மீது படர்ந்திருந்தவள்
இரவுகளை சுகங்களில் ஆழ்த்தியிருந்தாள்
ஒவ்வொரு வேளை பிரியும் போதும் கண்ணீர் துளிகளால் அணைத்து விடை தருவாள்
போகும் பாதை பெரிதாய்த் திறந்து கிடந்தும்
உன்னை அடைய முடியாத
துரதிஷ்டசாலியாக இருக்கிறேன் அன்பே ...

Comments
Post a Comment