ஒரு பறவையைப் போல இறக்கைகள்
கோடை வெயிலில் பழக்காரனின் கூடையில்
பழங்கள் வெம்பிச் சுருங்குவதைப் போல
என் மனம் உன்னைக் காணாத இந்த மதியத்திலிருக்கிறது
நன்கு கனிந்த பழத்தைப் போல
உன்னை ருசித்திருந்த நாட்கள் எங்கேயோ போய்விட்டன
நரகம் நம்மைச் சூழ்ந்த காலத்தில்
நீயும் நானும் பிரிந்திருக்கும் சாபத்தைப் பெற்றிருக்கிறோம்
தொடரும் இந்தக் கொடூரமான விதியில்
நாம் தப்பிப் பிழைத்துவிடுவோமா அன்பே
கட்டளைக்கு கீழ்பணிந்த நாம்
அடிமைகளைப் போல காதலைத் துறந்துவிட்டோம்
ஒரு பறவையைப் போல இறக்கைகள்
நமக்கு இருந்திருக்கலாம்
நீயும் நானும் யாருமற்ற வெளியில்
ஒரு மரத்தின் கிளையில் சுகித்துக் கிடந்திருக்கலாம்
எதற்கும் வாய்ப்பற்ற பூமியில் தனித்தனியே இருந்து
துடித்து மடிவதைத் தவிர வேறென்ன செய்துவிட முடியும்
நரக வேதனையில் உழன்று தவிக்கும்
இந்தக் காலத்தை உன் நினைவின் வழியே
கடப்பதைவிடவும் வேறொன்றுமில்லை
அவர்களோ முடிவை மாற்றிக்கொண்டே போகிறார்கள்
நாம் நகர மறுக்கும் கணங்களில் உயிர்த்து மடிந்து
உயிர்த்து மடிந்துகொண்டிருக்கிறோம்.

Comments
Post a Comment